கர்ப்பகாலத்தில் ரத்தப்போக்கு ஏற்படும் காரணங்களும் அதற்கான தீர்வுகளும்

Written by
Last Updated on

தாய்மை அடைதல் என்பது மிகச் சாதாரணமான விஷயம் அல்ல. பல சோதனைகளையும் வேதனைகளையும் கடந்த பின்னரே ஒரு பெண் தாய்மை எய்துமாறு இயற்கையில் படைக்கப்பட்டிருக்கிறது. கர்ப்பத்தின் ஆரம்ப காலங்களில் ஏற்படும் வாந்தி, மயக்கம் , ஒவ்வாமை, குமட்டல் என்பதெல்லாம் அனைவருக்கும் இயல்பானதுதான்.

ஆனால் வெகு சில கர்ப்பிணிகளுக்கு மட்டுமே கர்ப்ப காலத்தின் போது ரத்தக் கசிவு ஏற்படும் (1). இதனால் குழந்தைக்கு ஆபத்து நேருமோ என்கிற கவலை எல்லோருக்கும் உண்டு. கர்ப்ப காலத்தில் ஏற்படும் இந்த ரத்தப்போக்கு அறிகுறியானது ஆபத்தானது என்றாலும் கூட எல்லா சந்தர்ப்பங்களிலும் இதனால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாது என்பதே உண்மை.

கர்ப்பகால ரத்தக்கசிவு என்றால் என்ன

லேசான ரத்தக்கசிவு அல்லது ஸ்பாட்டிங் எனப்படும் துளித்துளியாக ரத்தம் கசிதல் இவற்றையே கர்ப்ப காலங்களில் ஏற்படும் ரத்தக்கசிவு என்கின்றனர். இது பொதுவாகக் கரு தங்கிய 7 முதல் 14 நாட்களுக்குப் பின்னர் ஏற்படலாம். கருவுற்ற முட்டையானது கருப்பையின் உட்சுவரில் இணைக்கப்படும் சமயத்தில் இப்படியான ரத்தக் கசிவுகள் நிகழலாம்.

கருமுட்டை வெளியான பிறகு கோடிக்கணக்கான விந்தணுக்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதனை உள்வாங்கும் கருமுட்டை பெலோப்பியன் குழாய் வழியாக கருப்பைக்குள் சென்று தங்குகிறது. கரு முட்டைக்குத் தேவையான புரதசத்துக்களை அம்மாவின் கர்ப்பப்பை ஏற்கனவே சேகரித்து வைத்திருக்கிறது (2) .

புரதத்திற்காகவும் ஆக்சிஜனுக்காகவும் அம்மாவின் கருப்பையோடு முதல்முறையாக கருமுட்டையானது இணைகிறது. இந்த நேரங்களில்தான் ஸ்பாட்டிங் எனப்படும் சிறு சிறு ரத்தத் துளிகள் வெளிப்படுகிறது.

கர்ப்பகால ரத்தக்கசிவு எப்போது ஏற்படும்

கருமுட்டையானது கருப்பைக்குள் தன்னைச் செலுத்திக் கொள்ள முற்படும் சமயம் அது செல்லும் பாதையில் உள்ள ரத்த நாளங்களை சீர்குலைக்கும். இதனால்தான் துளிதுளியாக ரத்தம் தென்படுகிறது. இதனால் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் ஒரு சில பெண்களுக்கு லேசானது முதல் அடர்த்தியானது வரை ரத்தப்போக்கு உண்டாகும்.

பெண்களின் உடல்வாகிற்கு ஏற்ப இளஞ்சிவப்பு முதல் அடர் ப்ரவுன் வரை இந்த ரத்தப்போக்கின் நிறம் மாறுபடும். கர்ப்ப கால ரத்தப்போக்கு என்பது நீங்கள் எதிர்பார்க்கும் நாள் கணக்கிற்கு முன்னதாகவே நிகழலாம். அதாவது கரு தங்கிய 7ம் நாளில் இருந்து 10 நாள்களுக்குள் இது ஏற்படலாம் (3).

கர்ப்பகால ரத்தக்கசிவு அறிகுறிகள் எப்படி இருக்கும்

கர்ப்பகால ரத்தக்கசிவின் அறிகுறிகள் மிகச் சுலபமாக உங்களால் கண்டுபிடிக்கும் வகையில் இருக்கும். ஒரு சில குறிப்பிட்ட அறிகுறிகள் கர்ப்பகாலத்தில் உங்களுக்கு இருப்பின் அதனைப் பற்றி மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள். அப்படியான சில முக்கிய அறிகுறிகள் இவைதான் :

ஆரம்ப கால ரத்தக்கசிவு

இது பெண்களுக்குக் கரு தங்கிய பின்னர் வழக்கமான மாதவிலக்கு ஏற்படும் நாள்களுக்கு சில நாட்கள் முன்பு ஏற்படும். இது எப்போதும் ஆபத்தான ஒன்று கிடையாது. மாதவிலக்கும் கிடையாது. பொதுவாக பெண்கள் இது மாதவிலக்கோ எனக் குழப்பம் அடைகின்றனர். ஆனால் அப்படியல்ல.

வழக்கத்திற்கு மாறான வண்ணம்

கர்ப்ப கால ரத்தக்கசிவு என்பது பெண்களுக்கு பெண்கள் மாறுபடலாம். இதில் இளஞ்சிவப்பு வண்ண ரத்தம் முதல் பல நிறங்களில் ரத்தக்கசிவு இருக்கலாம். அடர்நிற ப்ரவுன் அல்லது சில சமயம் கறுப்பு நிறத்தில் கூட ரத்தக்கசிவு அல்லது ரத்த துளிகள் ஏற்படலாம்.

மிக லேசான ரத்தப்போக்கு

கருமுட்டை கருப்பையில் தன்னை புகுத்திக் கொள்ள முற்படும் போது ஏற்படும் ரத்தக்கசிவானது பெரும்பாலும் 48 மணி நேரத்திற்குள் மேல் நீடிக்காது. பொதுவாக பெண்களில் பெரும்பான்மையினர் வெகு சில மணி நேர ஸ்பாட்டிங் அல்லது ஒரு சில துளிகளுடன் அவர்களுடைய ரத்தக்கசிவானது நின்று விடும். அப்படியானவர்கள் பயப்பட வேண்டியதில்லை.

நரம்பு பிடிப்பு

கருவானது கர்ப்பப்பைக்குள் தன்னை தங்க வைக்க முயற்சிக்கும்போது சில நேரங்களில் ஒரு சிலருக்கு நரம்பு பிடிப்பு அல்லது தசை பிடிப்பு போன்றவை ஏற்படலாம். சில சமயங்களில் இது வயிற்று தசைப் பகுதிகளில் ஏற்படலாம்.

மற்ற சில அறிகுறிகள்

பெரும்பான்மையான நேரங்களில் மாதவிலக்கு மற்றும் கருத்தரித்தல் இரண்டிற்குமான இடைவெளி குறைவாக இருக்கும். அதனால் மாதவிலக்கின் போது ஏற்படும் அதே அறிகுறிகள் கர்ப்பகால ரத்தக்கசிவின்போதும் இருக்கலாம். அவையாவன

  • உடல் அசதி
  • மனநிலை சமமின்மை
  • மயக்கம் அல்லது கிறுகிறுப்பு
  • உடல் வெப்பம் அதிகரித்தல்
  • தலைவலி
  • மார்பகத்தின் கனம் கூடுதல்
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • மலச்சிக்கல்
  • நுகரும் தன்மை அதிகரித்தல்
  • உணவின் மீது அதீத நாட்டம் அல்லது வெறுப்பு

போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். இது கர்ப்பகால ரத்தக்கசிவு தானா என்பதை நீங்களே சோதித்து முடிவு செய்துகொள்ளாமல் இந்த நேரங்களில் மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

இது கர்ப்ப கால ரத்தக்கசிவுதான் மாதவிலக்கு அல்ல என்பதை எப்படி கண்டுபிடிப்பது ?

கர்ப்ப கால ரத்தக்கசிவு என்பது நீங்கள் கருவுற்றிருக்கிறீர்கள் என்பதைச் சோதனை செய்து அறியும் முன்னதாகவே ஏற்படுகிறது. அதனால் பலரும் இதனை மாதவிலக்கு என்று முடிவு செய்து கொள்கிறார்கள். லேசான ரத்தக்கசிவு அல்லது துளிதுளியான ரத்தக்கசிவு என்பது பெரும்பாலும் மாதவிலக்கின் ஆரம்பமாகக் கூட இருக்கலாம் என்பதே உண்மை (4). இதற்கான வித்தியாசங்களை முழுமையான கண்டுபிடிப்புகள் இன்னும் செய்யப்படவில்லை.

பெண்களில் அதிக சதவிகிதத்தினருக்கு இந்த கர்ப்ப கால ரத்தக்கசிவு என்பது வழக்கமான மாதவிலக்கின் நிறத்தைக் காட்டிலும் வித்தியாசமானதாக இருந்திருக்கிறது. ஒரு சிலருக்கு வழக்கமான ரத்தக்கசிவின் நிறத்தை விட அடர்நிறத்தில் ஸ்பாட்டிங் நிகழ்ந்திருக்கிறது. ஒரு சிலருக்கோ ஸ்பாட்டிங் நேரங்களில் தசைப்பிடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.

ஆனால் ஒரு சிலருக்கோ இந்த நிறமாற்றங்கள் எதுவும் இருப்பதில்லை. தசைப்பிடிப்புகளும் ஏற்படுவதில்லை. ஸ்பாட்டிங் ஏற்பட்ட சில நாட்களில் மாதவிலக்கு வராமல் கருத்தரிப்பதும் உண்டு. சில சமயங்களில் ஸ்பாட்டிங் ஏற்பட்ட சில நாட்களில் மாதவிலக்கு நிகழ்ந்து விடுவதும் உண்டு. இது ஒவ்வொருவரின் உடல் தன்மைக்கு ஏற்ப மாறுபடும் என்பதால் மருத்துவரின் உதவி இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

எவ்வளவு நாட்களுக்கு இந்த கர்ப்ப கால ரத்தக்கசிவு இருக்கும்

கர்ப்பமான முதல் மூன்று மாத காலங்களுக்குள் இந்த வகை ரத்தக்கசிவு உண்டாகலாம். அதன்பின்பு இப்படியான ரத்தக்கசிவுகள் ஏற்படும் வாய்ப்புக்களை மிகக்குறைவானதே. பெண்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்யும்போது இது கண்டறியப்படுகிறது.

ஒரு சிலருக்கு மாதவிலக்கு ஆரம்பிக்கும்போது இப்படி வெறும் துளித்துளியாக ஆரம்பிக்கும். அதன்பின்னர் ரத்தப்போக்கு அதிகரிக்கும். இது இயல்பான ஒன்றுதான் என்பதால் தான் கருவுற்றிருக்கிறோமா இல்லையா என்பதில் பலருக்குக் குழப்பம் நேரலாம்.

பொதுவாக கரு உடலில் தங்கிய 7 முதல் 10 நாட்களுக்குள் இப்படியான ஸ்பாட்டிங் நிகழ்கிறது. இது எல்லோருக்கும் நடப்பதில்லை. ஒரு சிலருக்கே நிகழ்கிறது. கர்ப்பத்தின் முதல் எட்டு வாரங்களுக்குள் மட்டுமே இப்படியான ரத்தக்கசிவு அறிகுறிகள் ஏற்படலாம். 48 மணிநேரங்கள் வரைதான் இப்படியான ஸ்பாட்டிங் அல்லது ரத்தக்கசிவு நீடிக்கிறது. அதன்பின்னர் நின்று விடும். அதன்பின்பும் நிற்காமல் ரத்தக்கசிவு இருந்தாலோ அல்லது அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் (5).

எப்போது மருத்துவரை அழைக்க வேண்டும்

கர்ப்ப கால ரத்தக்கசிவு என்பது இயல்பான ஒன்றுதான். கருமுட்டை கர்ப்பப்பையோடு பொருத்தும்போது ஏற்படும் அழுத்தங்களால் ரத்த நாளங்கள் உடைகின்றன. அதனால் இந்த லேசான ரத்தக்கசிவு ஏற்படுகிறது. மருத்துவர் செய்யும் பிறப்புறுப்பு பரிசோதனைக்குப் பின்னர் கருப்பை வாயில் எரிச்சல் அல்லது உடலுறவால் ஏற்படும் வலி அல்லது தொற்றுகள் என்பது சாதாரணமான அறிகுறிகள் தான்.

ஆனால் சில சமயங்களில் கர்ப்ப பரிசோதனை நேர்மறையாக (பாசிட்டிவ்) வந்தபின்னர் ரத்தக்கசிவு தொடர்ந்தால் எக்டோபிக் கர்ப்பம், மோலார் கர்ப்பம் அல்லது கருச்சிதைவுக்கான அறிகுறியாக இருக்கக்கூடும் என்பதால், நீங்கள் அதை அனுபவித்தால் எப்போதும் உங்கள் மருத்துவ வழங்குநரை உடனடியாக அழைக்க வேண்டும். அவருடன் நீங்கள் ஒளிவுமறைவில்லாமல் விபரமாகப் பேசுவது அவசியம். கவலைப்படக் கூடாது. 90 சதவிகித கர்ப்பகால ரத்தக்கசிவுகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது (6)

அதே சமயம் ரத்தக்கசிவு இருப்பின் அந்த நேரங்களில் பெண்கள் ஓய்வில் இருப்பதும் அவசியமானது. ஓய்வென்பது உடல் உறவிற்கும் சேர்த்துதான். ஏற்கனவே ஒரு அழுத்தத்தில் சிதைந்து ரத்தநாளங்கள் உடைந்து விழுதுகளாக வெளியேறிக்கொண்டிருக்கும் சமயம் உடலுறவு என்பது மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். எனவே அந்த நாட்களில் நீங்கள் நிச்சயம் மருத்துவரின் ஆலோசனையோடு கூடவே முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும்.

கர்ப்பகால ரத்தக்கசிவிற்கான சிகிச்சை முறைகள்

கர்ப்பகால ரத்தக்கசிவு என்பது உடலுக்குள் ஒரு உயிர் நுழையும் தருணங்களால் ஏற்படும் இயல்பான மாற்றங்கள்தான். அதனால் இதற்கான தீவிர சிகிச்சை முறைகள் என எதுவும் தேவைப்படுவதில்லை.

பொதுவாக கர்ப்ப காலங்களில் ஏற்பட்ட ரத்தக்கசிவானது 48 நாட்களுக்குள் நின்று விடக்கூடியது என்பதால் சிகிச்சைகள் இதற்கு அவசியம் இல்லை. ஆனால் வழக்கத்திற்கு மாறான அளவில் ரத்தப்போக்கு இருப்பது சில சமயம் கருச்சிதைவின் அடையாளமாக இருக்கலாம் அல்லது கருத்தரித்தல் குறைபாடுகளால் ஏற்படலாம்.

இப்படியான கர்ப்பகால ரத்தப்போக்கு சமயங்களில் மருத்துவர்கள் டாம்பன்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஒரு சிலருக்கு கர்ப்பகாலம் முடியும்வரை இந்த ரத்தக்கசிவு நீண்டு இருந்தால் அறுவை சிகிச்சை முறையில் குழந்தைப் பிறப்பு நிகழும். கர்ப்ப கால ரத்தக்கசிவு பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகுங்கள் (7). உங்கள் உடல்நிலைக்கேற்ற தீர்வுகளை அவரால்தான் சொல்ல முடியும்.

References

 

Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Latest Articles